மனித சமூகத்தின் நடத்தை முறைகளையும் சமூக பண்பாட்டு நிறுவனங்களையும் நுட்பமாக பகுப்பாய்வுக்குட்படுத்தும் கல்விப் புலங்களுள் மானிடவியல் குறிப்பிடத்தக்கது. இப்புலம் மனித சமூகத்தை பண்பாட்டு நிலையிலும் உயிரியல் நிலையிலும் முழுதளாவிய நிலையில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. குறிப்பாக மனித தோற்றம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் படிமலர்ச்சி, குடும்பம், உறவுமுறை, திருமணம், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் தோற்றம் போன்றவை குறித்து மானிடவியல் முன் வைத்துள்ள கோட்பாடுகள் சமூக அறிவியல் புலங்களின் பல்வகையான ஆய்வுகளுக்கு வழிகாட்டியுள்ளன. குறிப்பாக மொழி, மந்திரம், சடங்குகள், வழிபாடுகள் ஆகியவை குறித்து மானிடவியல் முன்வைத்த கருத்துக்கள் இன்று பரவலாக எல்லா கல்விப் புலங்களிலும் பேசப்படக்கூடிய ஒன்றாக இருப்பதைக் காணலாம். இனவரைவியல் என்றால் என்ன என்பது பற்றிப் பல்வேறு வரையறைகளும் விளக்கங்களும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஆய்வே என்கிறார். (Brunvend, 1986:329) பல்வேறு ஆய்வாளர்கள் இன வரைவியல் குறித்த பல்வேறு வரையறைகளை முன் வைக்கின்றனர். இதுவரையிலும் முன் வைக்கப்பட்ட அனைத்து வரையறைகளிலிருந்தும் இனம் என்பதை மனித சமூகத்தோடே இணைத்து பார்க்கும் போக்கு இருப்பதை மறுக்க இயலாது. இனவரைவியலிலுள்ள இனம் என்பதனை மொழி, மதம் போன்ற பல்வேறு பண்பாட்டு கூறுகளுள் ஏதேனும் ஒன்றினால் பொதுவாக அடையாளப்படுத்தப்படும் குறிப்பிட்ட மக்கள் பிரிவினரைக் குறிப்பதே ஆகும் என்கின்றனர். இதன் மூலம் இன வரைவியல் என்கின்ற இந்த ஆய்வு முறையிலானது மனிதனோடும் மனித சமூகத்தோடும் தொடர்புடைய ஒன்றாகவே இவ்வாய்வுலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இவ்வுலகில் எந்த உயிரினமும் தனித்த நிலையில் உயிர் வாழ்வது என்பது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு உயிரினங்களும் அது வாழும் சூழலோடும் அங்கிருக்கும் பிற உயிரினங்களோடும் இணைந்தே தங்களை இவ்வுலகில் வாழ்வதற்கு ஏற்றார் போல் தகவமைத்து கொள்கின்றன. அவ்வாறே மனித இனமும் பிற உயிரினங்களோடு சேர்ந்தே தங்கள் வாழ்வியலை கட்டமைத்து கொள்கின்றனர். இந்நிலையில் இனவரைவியல் குறித்து சிந்திக்கும் போது மனித இனத்திற்கானது என்ற பார்வையிலேயே இதுவரையிலும் சிந்தித்து வந்திருக்கின்றோம். ஆனால் மனித இனமானது தனித்த நிலையில் செயல்படக் கூடியது அன்று. அவர்கள் பிற உயிரினங்களோடு கொண்ட உறவோடே தங்கள் வாழ்வியலை கட்டமைத்துக் கொள்கின்றனர். உணவுத் தேவை, தொழில் என ஆரம்பித்து வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஏதாவது ஒரு வகையில் பிற உயிரினங்களோடு இணைந்தே வாழ்கிறது மனித இனம். மனித இனம் குறித்த இன வரைவியலில் அவர்களோடு இணைந்திருக்கும் பிற உயிரின தொடர்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். அவற்றை தவிர்த்துவிட்டு மனித இனத்திற்கான இனவரைவியல் முழுமையானதாக இருக்க முடியாது. இந்த சிந்தனைகளோடே மனித இனம் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பிற உயிரினங்களையும் சேர்த்து பல்லுயிர் இனவரைவியல் என்ற புதிய முறையியலில் எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாக கொள்ளலாம். குறிப்பாக மனித வாழ்வியலில் எல்லா சூழலிலும் பிற உயிரினங்களோடு மனிதன் தொடர்புடன் இருப்பினும் தெய்வ வழிபாடுகளில் மனிதன் மற்றும் தெய்வம் தவிர்த்து பிற உயிரினங்களின் பங்கு, அவற்றின் செயல்பாடுகள் அவை குறித்த மக்கள் நம்பிக்கைகள் என்ன என்பதனை ஆய்வதாகவும் இக்கட்டுரை அமைகின்றது.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Mon,) studied this question.
www.synapsesocial.com/papers/69fada7f03f892aec9b1e526 — DOI: https://doi.org/10.5281/zenodo.14619222
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...