இனவரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். மானுடவியலின் முக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக இனவரைவியல் (Ethnography) அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு (Ethnic group) அல்லது பண்பாட்டை விவரிக்கும் கலை அல்லது அறிவியலே இனவரைவியலாகும். ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பண்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குதல் இனவரைவியல் நோக்கமாதலால் இது அடிப்படையில் வருணனைத் தன்மை கொண்டதாகவே அமையும் (பண்.மா.,ப.120) என்பார் பக்வத்சல பாரதி. ஓர் இலக்கியம் சிறப்புற்று விளங்க கதாபாத்திரம், கதை சொல்லும் நேர்த்தி, கதை மாந்தர்களின் நடத்தை, பின்புல காட்சிகள் இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக பதிவு செய்வது படைப்பாளியின் இனவரைவியல் அறிவாகும். ஜோ டி குருஸ் தன்னுடைய படைப்புகளான கொற்கை, ஆழிசூழ் உலகு இவற்றுள் மீனவ சமூக வாழ்வியலை இனவரைவியலை கண்முன் நிறுத்துவதில் மிகவல்லவராக திகழ்கிறார் எனலாம். படைப்பாளி தன் கற்பனை சக்தியோடு ஓர் அறைக்குள் அமர்ந்து கொண்டு இலக்கியம் படைத்துவிட முடியாது. தன்னைச் சுற்றி நடக்கும் இயற்கையின் ஒவ்வொரு சக்தியையும் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி உள்வாங்கி அசைபோட்டு நம் கண்முன்னே, நிறுத்துகின்ற பொழுதே ஓர் இலக்கியம் உன்னத இலக்கியமாக மாறுகிறது. படைப்பாளி தான் சொல்ல நினைப்பதை நேரடியாகப் பேசிவிட்டால் அது செய்தித் தொகுப்பாகிவிடும். அதற்கு இலக்கியத்தன்மை கொடுக்க இனவரைவியலும் புனைவும் தேவைப்படுகின்றன. படைப்பாளி உருவாக்கும் பனுவல் என்பது சமூக வாழ்விலிருந்து கட்டப் படுகின்றது. எனவே அவன் வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றி பேச வாழ்வியலைப் பின்புலமாக எடுத்துக் கொள்கிறான். எனவே படைப்புக்கும் இனவரைவியலுக்கும் நெருக்கமாக உறவு இருக்கிறது (இலக். இனவரைவியல், ப.25) என்பர். புவிச்சூழலியல், சுற்றுச் சூழல், கால நிலை, குடியிருப்பு முறை, பொருள்சார் பண்பாடு, குடும்ப அமைப்பு, திருமண முறை, உறைவிட முறை, வாழ்வியல் சடங்குகள், குழந்தை வளர்ப்பு முறை, பண்பாட்டு மயமாக்கும் முறை, மக்களின் உளவியல் பாங்குகள், மணக்கொடை (வரதட்சணை &பரிசம்), மணவிலக்கு, வாழ்க்கை பொருளாதாரம், தொழிற்பகுப்பு முறை, உற்பத்தி முறை, நுகர்வு முறை, பங்கீட்டு முறை, பரிமாற்ற முறை, கைவினைத் தொழில்கள், அரசியல் முறைகள், அதிகார உறவுகள், சமூகக் கட்டுப்பாடு, மரபுசார் சட்டங்கள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறை, மந்திரம், சூனியம், விழாக்கள், இசை, விளையாட்டுக்கள் போன்ற கூறுகளின் உள்ளடக்கமே இனவரைவியலாகும். பரதவர்களிடையே காணப்படும் நம்பிக்கைகள், திருமண சடங்குகள், மரபுசார் சட்டங்கள் மற்றும் வாழ்வியல் நெறிகளை வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: